சனி, 4 ஜூலை, 2009

நாங்கள் வளர்ந்துவிட்டோம் !




நாங்கள் வளர்ந்துவிட்டோம் !
நாகரிகத்தில் உயர்ந்துவிட்டோம் !

கவண் வீசி
கல்லெறிந்து
காட்டு விலங்கை
வேட்டையாடிய
காலமது கற்காலம் !

விமானம் மோதி
வெடிகுண்டு வீசி – மனித
உயிர் குடிக்கும்
உன்னத காலம் – இக்காலம் !

அன்றோ –
காலரா , அம்மையென
கொள்ளை நோய்கள்
கொண்டு சென்ற
மக்கள் உயிர் கணக்கு
சொல்லி மாளாது !

இன்றோ –
மனிதன் கண்டறிந்த
ஹைட்ரஜன் குண்டெறிந்தால்
பூமிதனில் – ஒரு
புல்பூண்டு மீளாது !


கோடிகோடியாய்
கொள்ளையடித்தும்
தர்மம் வெல்லும் – என
தத்துவம் பேசும்
அரசியல் கூத்து ஒருபுறம் !

உழைத்தும் பயனின்றி ,
ஒருவேளை உணவின்றி ,
குடும்பமே கொண்டவழி
தற்கொலைதான் என
பட்டினி சாவுகள் மறுபுறம் !

தொழிலுக்கேற்ப
சாதிமுறை
சொல்லிவைத்தது அக்காலம் !

ஜாதிக்கொன்றாய்
கட்சி கொண்டு - நாட்டு
ஒற்றுமைக்கு
கொள்ளிவைப்பது
இக்காலம் !


ஆயிரம் புத்தர் என்ன ?
அஹிம்சைசொன்ன காந்தி என்ன ?
காதுகளை தொலைத்துவிட்டோம் !

எல்லாம்வல்ல இறைவனையே
அல்லா , கிறிஸ்து , கிருஷ்ணன் என
மதத்திற்கொன்றாய்
பிரித்துவிட்டோம் !

மதம் கொண்டலையும்
மனித இனம்
நிதம் கொன்று தின்கிறது
தன் இனத்தை !

நாகரிக இமயத்தை
தொட்டுவிட்டபின்பும்
விட்டுவிடவில்லை
தன் மிருககுணத்தை !

அறிவின் முதிர்ச்சியில் ,
அறிவியல் வளர்ச்சியில் ,
அண்டத்தையே
அளந்துவிட்டோம் !

க்ளோனிங் மாடல் ,
குரோமோசோம் தேடல் - என
பிரம்மன் தொழிலையே
பிளந்து விட்டோம் !

நிலவின் நிறமறிந்து ,
செவ்வாயின் குணமறிந்து ,
சூரியனின் சுகமறியும்
விஞ்ஞானத்தில்
வளர்ந்துவிட்டோம் !

மனிதநேயம் மட்டும்தான்
மறந்துவிட்டோம் !

மனதின் அளவில் மட்டும்
மாறாமல் இருந்துவிட்டோம் !

புறவாழ்வில் புன்சிரிப்பு !
அகவாழ்வில்
சுகம்காணா தவிதவிப்பு !

தங்கம் வைரத்தை
தோண்டிப்பார்த்த
இரும்புமனம் -
இதயத்தை மட்டும்
எங்கும்
தேடிப்பார்க்கவில்லை !

அறிவின் வெளிச்சத்தில் ,
நாகரிக விளிம்பில்
நடைபோட்டாலும்
மனதில் இருள் மட்டும்
மண்டியே கிடக்கிறது !

பாலையாக தகிக்கும்
பாதை இதை
பனியாக குளிரச்செய்யும்
வசந்தம் ஒன்று
வருவது எப்போது ?

இருளகற்றும் பரிதியே !
எழுச்சியின் விடியலே !
எழுந்து வா ! விரைந்து வா !
எதிர்படும் இடர்யாவும்
கதிர்படும் பனியென
கரைந்து ஓடட்டும் !
துயர் தொலைத்து
மனித இனம்
மனம் நிறைய
மகிழ்ச்சி கீதம் பாடட்டும் !

ஞாயிறு, 21 ஜூன், 2009

காத்திருப்பேன்


பார்த்து ரசித்தேன் சிலநேரம் !
பாராமல் தவித்தேன் பலநேரம் !!

பேசி சிரித்தாய் சிலநேரம் !
பேசாமல் வதைத்தாய் பலநேரம் !!

கனவில் நிலைத்தாய் சிலநேரம் !
கண்ணுறக்கம் கலைத்தாய் பலநேரம் !!

புனலாக குளிர்ந்தாய் சிலநேரம் !
தனலாக தகித்தாய் பலநேரம் !!

பூந்தென்றலாய் பூசினாய் சிலநேரம் !!
புயலாக வீசினாய் பலநேரம் !!

என்னுடல் தழுவினாய் சிலநேரம் !
என்னுயிர்விட்டு நழுவினாய் பலநேரம் !!

விழிகளில் நீ இருந்தாய் சிலநேரம் !
விழிகளில் நீர் இருந்தது பலநேரம் !!

செவ்வானில் சிறகடித்தேன் சிலநேரம் !
கண்ணீரில் நான் மிதந்தேன் பலநேரம் !!

முத்தத்தின் நுட்பம் அறிந்தேன் சிலநேரம் !
யுத்தத்தின் வெட்பம் உணர்ந்தேன் பலநேரம் !!

எனக்காக அழுதிருந்தேன் சிலநேரம் !
உனக்காக தொழுதிருந்தேன் பலநேரம் !!

உன் நினைவால் வாழ்கிறேன் சிலநேரம் !
உன் பிரிவால் வீழ்கிறேன் பலநேரம் !!

நானாக நானிருந்தேன் சிலநேரம் !
நீயாக வாழ்ந்திருந்தேன் பலநேரம் !!

உன்னோடு நானிருந்தேன் சிலகாலம் !
உனக்காக காத்திருப்பேன் பலகாலம் !!