கும்பகோணம் நகரில் இருந்து 6கிமீ தொலைவில் உள்ளது ஸ்ரீசிவபாதசேகரமங்கலம் எனும் உடையாளூர் .
முதலாம் குலோத்துங்க சோழனின் நாற்பத்திரண்டாவது ஆட்சியாண்டில் (கி.பி. 1112) ஸ்ரீசிவபாதசேகரமங்கலத்தில் (உடையாளூரில்) ராஜராஜதேவரின் திருவுருவம் திகழ்கின்ற ஸ்ரீசிவபாதசேகர தேவர் திருமாளிகை என்ற பெயரில் மாளிகை ஒன்று இருந்துள்ளது.
அம்மாளிகையின் முன்பகுதியில் அமைந்திருந்த மண்டபப்பகுதி சிதைவடைந்து காணப்பெற்றதால் பிடவூர் எனும் ஊரினைச் சார்ந்த பிடவூர் வேளாண்வேளிர் அரிகேசவனான கச்சிராஜர் என்பவர் அப்பகுதியினை மீண்டும் எடுப்பித்து புனர்நிர்மாணம் செய்தார் என்ற கல்வெட்டு உடையாளூரில் உள்ளது.
இதனால் உடையாளூரில் முதலாம் ராஜராஜ சோழனின் திருவுருவம் எழுந்தருளப்பெற்ற ஒரு மாளிகை இருந்தது என்பது உறுதியாகின்றது.
அது முதலாம் இராஜராஜ சோழனின் நினைவு மாளிகையே, அதனை பள்ளிப்படை (சமாதி கோயில்) எனக்கூட கருத வாய்ப்புள்ளது.
அந்த மாளிகை உடையாளூரின் எப்பகுதியில் இருந்தது என்பது இதுகாறும் உறுதி செய்ய இயலவில்லை. உள்ளூர் ஆற்றங்கரை அருகில் ஒரு வாழைத்தோட்டத்தில் புதைந்த நிலையில் காணப்பெறும் சிவலிங்கம் திகழும் இடமே அப்பண்டைய மாளிகை என்பது அமரர் என். சேதுராமன் என்ற ஆய்வு அறிஞரின் முடிவாகும்.
அதனையே ராஜராஜசோழன் பள்ளிப்படையாக கருதி ஊர்மக்கள் வழிபாடு செய்கின்றனர்.
2013ல் பார்த்தபோது இருந்ததற்கும் 2022க்கும் அந்த இடத்தில் சிறிய மாற்றங்கள் உள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக