ஞாயிறு, 17 ஏப்ரல், 2022

பஞ்சவன்மாதேவீஸ்வரம் எனும் பஞ்சவன்மாதேவி பள்ளிப்படை, பட்டீஸ்வரம்

பஞ்சவன்மாதேவீஸ்வரம் எனும் பஞ்சவன்மாதேவி பள்ளிப்படை ,  பட்டீஸ்வரம் 

தன் மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் அவளின் நினைவாக ஷாஜகான் கட்டிய தாஜ்மஹாலை இந்த உலகமே கொண்டாடுகிறது,     
 தாஜ்மஹால் கட்டுவதற்கு 600 வருடங்களுக்கு முன்பே தமிழகத்தில் ஒரு தாயின் பிரிவை தாளாமல் மகன் கட்டிய கோயில் ஒன்று உள்ளது என்பது உலகிற்கு தெரியுமா?   அதுவும் தன்னை பெற்றெடுக்காத தாய்க்கு மகன் கட்டிய கோயில் அது. 
  
உலகமகா தேவியார், சோழ மாதேவியார், திருபுவன மாதேவியார், அபிமானவல்லியார், திரைலோக்கிய மாதேவியார், பஞ்சவன் மாதேவியார், பிருதிவி மாதேவியார், இலாட மாதேவியார், மீனவன் மாதேவியார், நக்கன் தில்லை அழகியார், காடன் தொங்கியார், கூத்தன் வீராணியார், இளங்கோன் பிச்சியார்’ என பதினாறு பேரின் பெயர்கள்  ராஜ ராஜனின் மனைவிகள் என்றும்,   ‘நம் பெண்டுகள்’ என்று அவராலேயே தஞ்சைப் பெரிய கோவிலில் கொடைப்பற்றிய குறிப்பில் பொறித்து வைக்கப் பட்டுள்ளது. 

தந்திசக்தி விடங்கி என்றழைக்கப்படும் உலக மகா தேவியாரே பட்டத்து அரசி .

இராஜராஜ சோழன் பல மனைவியருடன் வாழ்ந்தாலும், குறைந்த அளவிலான மக்களைப் பெற்றிருந்தார் . 
இராஜராஜசோழனின் மகனான இராஜேந்திரனின் தாயார், திருபுவன மாதேவி என்றழைக்கப்பட்ட வானவன் மாதேவி ஆவாள்.

ஆனால் இராஜேந்திரனை மிகவும் பாசத்தோடு வளர்த்தவள் பழுவேட்டரையர் குலப்பெண்ணான பஞ்சவன்மாதேவி.

 ராஜேந்திரனை தவிர வேறு ஆண்வாரிசுகள் உருவாகி விடக்கூடாது என்ற திடமான முடிவில் இருந்தவள் பஞ்சவன்மாதேவி. அதற்காகவே தனக்கு குழந்தை பிறந்துவிடக்கூடாது, தான் மலடாகவேண்டும் என்பதற்காக மருந்தினை உட்கொண்டவள் இந்த பஞ்சவன்மாதேவி என்ற கதைகளும் உண்டு.

தன்னை மிகுந்த பாசத்தோடு வளர்த்த அத்தகைய சிற்றன்னையின் பிரிவை தாங்க முடியாமல் அவருக்காக ஒரு கோயிலை எழுப்பியுள்ளான்   கங்கை முதல் கடாரம் வரை வென்ற “ராஜேந்திர சோழன்”. 

உலகில் தாயிற்காக கட்டிய முதல் கோயில் அநேகமாக இதுவாகவே இருக்கக்கூடும், அதுவும் அதை ஒரு தமிழ் மன்னன் கட்டியிருக்கிறான் என்பது நாம் எவ்வளவு பெருமைப்பட வேண்டிய விசயம்.   
 
இது கும்பகோணத்துக்கு அருகில் உள்ள பட்டீஸ்வரத்தில் அமையப்பெற்றுள்ளது.

பஞ்சவன் மாதேவியின் பூதவுடலை வைத்து அதன்மேல் சிவலிங்கம் வைத்து கட்டப்பட்ட ஒரு பள்ளிப்படை கோயில் இது என்பது இதன் கூடுதல் சிறப்பு.


ஸ்ரீவிமானத்து அதிஷ்டானத்து கண்டப்பகுதியில் ராஜேந்திர சோழனின் 7ம் ஆட்சியாண்டில் (கி.பி.1019) பொறிக்கப்பெற்ற நீண்ட கல்வெட்டுச் சாசனமொன்று காணப்பெறுகின்றது. அதில் இவ்வாலயத்தை பள்ளிப்படை பஞ்சவன் மாதேவீஸ்வரம் என்றுள்ளது.

சிறிய ராஜகோபுரம் கடந்து கோயிலுக்குள் சென்றால் அழகிய ஸ்ரீவிமானம், அர்த்தமண்டபம் முகமண்டபம் ஆகியவற்றுடன் முழுதும் கருங்கற்களால் எடுக்கப்பெற்றதோர் ஆலயமாக பஞ்சவன் மாதேவீஸ்வரம் காட்சி நல்குகின்றது.. 

கோபுரம் கடந்து திருசுற்றை அடையும்போது மகாமண்டப வாயிலில் இரு துவார பாலகர், இத்தனை பேரழிவுகளையும் கடந்து அவ்வாலயத்தைக் காத்து நிற்கும் காட்சியை நாம் கண்டு மகிழலாம். 

பழுவேட்டரையர்களின் கலைப்பாணியில் அமைந்த சிற்பத்தூண்களையும், பிற சிற்பங்களையும் கண்டு ரசித்தவர்கள் இங்கு காணப்படும் அந்த சிம்மத்தூண் பழுவேட்டரையர் கலைப்பாணியில் அமைந்த ஒன்று என்பதை கண்டு கொள்வர்.

இங்குள்ள நந்தியின் பேரழகை எடுத்துக்கூறுதல் இயலாத ஒன்றாம். சலங்கை மாலைகளைக் கழுத்தில் கொண்டவாறு உயிரோடு ஒரு காளை படுத்திருப்பதை நாம் காண்போம். அதனைக் கையால் தொட்டால்தான் அது கல் என்பதை நாம் அறிவோம்.

கருவறையினுள் தாராலிங்கமாக ஈசன் அருள்பாலிக்கிறார்.
இறைவியின் பெயர் விமலநாயகி. 
இறைவியின் கைகளில் ஆறு விரல்கள் இருப்பதாக இங்கு பூஜை செய்பவர் கூறினார்.
















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக