ஞாயிறு, 25 மார்ச், 2012

உலக மக்கள் தொகை தினம் - ஜூலை 11




1987-ஆம் ஆண்டு ஜுலை 11-ஆம் நாள் உலக மக்கள்தொகை 500 கோடியை தாண்டியது. மக்கள்தொகை பெருக்கத்தின் அபாயத்தை மக்களுக்கு உணர்த்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையானது ஜுலை 11-ஆம் நாளை “உலக மக்கள் தொகை தினமாக” அறிவித்தது. 1901-ல் 160 கோடியாக இருந்த உலக மக்கள் தொகை, 1960-ல் 300 கோடியாகவும், 1974-ல் 400 கோடியாகவும், 1987-ல் 500 கோடியாகவும் அதிகரித்தது். தற்போது உலக மக்கள் தொகை 690.8 கோடியாக உள்ளது.. இந்த தினத்தில் பெருகிவரும் மக்கள்தொகை பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதுடன், அதனை கட்டுபடுத்துவதில் ஒவ்வொருவருக்கும் பங்குண்டு என்பதையும் அறியச்செய்ய வேண்டும். 2011 -ம் ஆண்டின் உலக மக்கள் தொகை தின செய்தியாக “அவசரமான உளகளாவிய பிரச்சனைகளின் மீது கவனத்தை கொணர்தல்” ( Calling Attention to Urgent Global Issues ) என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.



இந்தியா – தமிழ்நாடு - புள்ளிவிவரம்

2001-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள்தொகை 102.9 கோடியாகும். தமிழ்நாட்டின் மக்கள்தொகை 6.2 கோடியாகும். 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள்தொகை 121 கோடியாகும். தமிழ்நாட்டின் தற்போதய மக்கள்தொகை 7.2 கோடியாகும். கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் மக்கள்தொகை 18.1 கோடி அதிகரித்துள்ளது. 135 கோடி மக்கள்தொகை கொண்ட சீனா உலகில் மக்கள்தொகை அதிகமுள்ள நாடாக திகழ்கிறது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 1.38 சதவிகித மக்கள்தொகை வளர்ச்சி ஏற்படுகிறது. அதாவது மக்கள்தொகை நாளொன்றுக்கு சராசரியாக 44353 அதிகரிக்கிறது. ஒரு நிமிடத்திற்கு 51 குழந்தைகள் இந்தியாவில் பிறக்கின்றன. ஆனால் “ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை” என்ற கட்டாய சட்டத்தின் மூலம் சீனாவில் ஆண்டு மக்கள்தொகை வளர்ச்சி 0.49 சதவிகிதமாக உள்ளது. இதே நிலை தொடருமானால் 2050-ல் சீனாவை பின்னுக்கு தள்ளிவிட்டு ” உலகில் மக்கள்தொகை அதிகமுள்ள நாடு” என்ற முதலிடத்தை இந்தியா பிடிக்கும். 2050-ல் இந்தியாவின் மக்கள்தொகை 180 கோடியாகவும், சீனாவின் மக்கள்தொகை 142 கோடியாகவும் இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.



மக்கள்தொகை பெருக்கத்தின் விளைவுகள்:

பெருகிவரும் மக்கள்தொகையால் விளைநிலங்கள் எல்லாம் விலைநிலங்களாக மாறிவருகின்றன. இதனால் விவசாயம் மற்றும் உணவு உற்பத்தி குறைகிறது. நீர்நிலைகள் குறைவதால் குடிநீர் தட்டுப்பாடு வருகிறது. நிலத்தடி நீர்வளம் குறைந்துபோகிறது.

மக்கள்தொகை பெருக்கத்தின் காரணமாக வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கிறது. தனிநபர் வருமானம் குறைகிறது. குடும்பத்தின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. இது குழந்தைகளின் கல்வி, உணவு, நலம் போன்றவற்றை பாதிக்கிறது. சரிவிகித உணவு கிடைக்காமல் போவதால் உடல்நலம் , சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. அடிப்படைத்தேவைகள் முழுதும் கிடைக்காமல் போகிறது. வருங்கால சமுதாயம் பாதிப்புக்கு உள்ளாவதால் கொலை, கொள்ளை, தீவிரவாதம் போன்றவை சமுதாயத்தில் வளர்கின்றன. இவை மட்டுமின்றி இயற்கை வளங்கள் தட்டுப்பாடு, சுற்றுப்புறச்சூழல் சீர்கேடு, உலக வெப்பமாதல் போன்றவற்றிற்கும் மக்கள்தொகை பெருக்கம் காரணமாக அமைகிறது.



குடும்பநலம் :

1952-ம் ஆண்டு இந்தியா “தேசிய குடும்பநலத் திட்டத்தை” உலகில் முதல்முறையாக செயல்படுத்தியது. குடும்பநலம் என்பது குழந்தை பிறப்பதை தடுப்பது மட்டுமல்ல, பேறுசார் மற்றும் தாய்சேய் நலத்தை பாதுகாத்து, குழந்தை பருவம், வளரிளம் பருவம், தம்பதியர் நலம் என ஒவ்வொரு நிலையிலும் நலமாக வாழவைப்பதாகும். குடும்பநல முறைகளை மேற்கொள்வதால் அளவான குடும்பம் அமைகிறது. தாயின் உடல்நலத்தோடு, குடும்பத்தில் உள்ள அனைவரின் உடல்நலமும் பேணப்படுகிறது. அளவான குடும்பம் வளமாக வாழ்கிறது. குடும்பநலத் திட்டத்தின் காரணமாக பிறப்பு விகிதம், இறப்பு விகிதம், சிசு மரண விகிதம் போன்றவை குறைக்கப்பட்டுள்ளன.



ஆண்களுக்கான நவீன தழும்பில்லா வாசக்டமி குடும்பநலமுறை, பெண்களுக்கான குடும்பநல அறுவைசிகிச்சை போன்றவை நிரந்தர கருத்தடை முறைகளாகும். கருத்தடை வளையம் (Copper – T ), கருத்தடை மாத்திரைகள், அவசரகால கருத்தடை மாத்திரைகள், நிரோத் போன்றவை தற்காலிக கருத்தடை முறைகளாகும்.



நவீன தழும்பில்லா குடும்பநல வாசக்டமி குடும்பநலமுறை ஏற்கும் ஆண்களுக்கு ரூபாய் 1100 ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது, பெண்களுக்கான குடும்பநல அறுவைசிகிச்சையை விட, ஆண்களுக்கான நவீன தழும்பில்லா வாசக்டமி முறை எளிதானது. இம்முறையில் உள்நோயாளியாக தங்கவேண்டிய அவசியமில்லை. இரத்த இழப்பின்றி, தையலின்றி ஒருசில நிமிடங்களில் வாசக்டமி செய்யப்பட்டுவிடும். ஆண்மைகுறைவு ஏற்படுவதில்லை. தாம்பத்திய வாழ்க்கை சுகமாக இருக்கும். அன்றாட பணிகளை வழக்கம்போல செய்யலாம்.

பெண்களுக்கான குடும்பநல அறுவைசிகிச்சைக்கு ரூபாய் 600 ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. பெண்களுக்கான கருத்தடை வளையம் ஒருமுறை பொருத்திக்கொண்டால் 10 வருடங்கள் வரை குழந்தை பிறப்பை தவிர்க்கலாம். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், நலவாழ்வு மையங்கள் ஆகிய இடங்களில் கருத்தடை வளையம் இலவசமாக பொருத்தப்படும்.



கடமை:

எனவே நாட்டுமக்கள் அனைவரும் “சிறு குடும்பம் – சீரான வாழ்வு” என்ற நெறியினை பின்பற்றினால் வீடு மட்டுமல்ல, நாடும் வளம்பெறும். நிலக்கரி, எரிவாயு, எண்ணெய் எரிபொருள்கள் போன்றவை வருங்கால தலைமுறைக்கு கிடைக்காமல் போகும் நிலை கூட வரலாம். எனவே மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவது ஒவ்வொரு குடிமகனுடைய கடமையாகும். இந்த உலக மக்கள்தொகை தினத்தில் மக்கள்தொகை பெருக்கம் பற்றிய விழிப்புணர்வை பெறுவதும், ஏற்படுத்துவதும் நம் அனைவருடைய கடமையாகும்.

சனி, 4 ஜூலை, 2009

நாங்கள் வளர்ந்துவிட்டோம் !




நாங்கள் வளர்ந்துவிட்டோம் !
நாகரிகத்தில் உயர்ந்துவிட்டோம் !

கவண் வீசி
கல்லெறிந்து
காட்டு விலங்கை
வேட்டையாடிய
காலமது கற்காலம் !

விமானம் மோதி
வெடிகுண்டு வீசி – மனித
உயிர் குடிக்கும்
உன்னத காலம் – இக்காலம் !

அன்றோ –
காலரா , அம்மையென
கொள்ளை நோய்கள்
கொண்டு சென்ற
மக்கள் உயிர் கணக்கு
சொல்லி மாளாது !

இன்றோ –
மனிதன் கண்டறிந்த
ஹைட்ரஜன் குண்டெறிந்தால்
பூமிதனில் – ஒரு
புல்பூண்டு மீளாது !


கோடிகோடியாய்
கொள்ளையடித்தும்
தர்மம் வெல்லும் – என
தத்துவம் பேசும்
அரசியல் கூத்து ஒருபுறம் !

உழைத்தும் பயனின்றி ,
ஒருவேளை உணவின்றி ,
குடும்பமே கொண்டவழி
தற்கொலைதான் என
பட்டினி சாவுகள் மறுபுறம் !

தொழிலுக்கேற்ப
சாதிமுறை
சொல்லிவைத்தது அக்காலம் !

ஜாதிக்கொன்றாய்
கட்சி கொண்டு - நாட்டு
ஒற்றுமைக்கு
கொள்ளிவைப்பது
இக்காலம் !


ஆயிரம் புத்தர் என்ன ?
அஹிம்சைசொன்ன காந்தி என்ன ?
காதுகளை தொலைத்துவிட்டோம் !

எல்லாம்வல்ல இறைவனையே
அல்லா , கிறிஸ்து , கிருஷ்ணன் என
மதத்திற்கொன்றாய்
பிரித்துவிட்டோம் !

மதம் கொண்டலையும்
மனித இனம்
நிதம் கொன்று தின்கிறது
தன் இனத்தை !

நாகரிக இமயத்தை
தொட்டுவிட்டபின்பும்
விட்டுவிடவில்லை
தன் மிருககுணத்தை !

அறிவின் முதிர்ச்சியில் ,
அறிவியல் வளர்ச்சியில் ,
அண்டத்தையே
அளந்துவிட்டோம் !

க்ளோனிங் மாடல் ,
குரோமோசோம் தேடல் - என
பிரம்மன் தொழிலையே
பிளந்து விட்டோம் !

நிலவின் நிறமறிந்து ,
செவ்வாயின் குணமறிந்து ,
சூரியனின் சுகமறியும்
விஞ்ஞானத்தில்
வளர்ந்துவிட்டோம் !

மனிதநேயம் மட்டும்தான்
மறந்துவிட்டோம் !

மனதின் அளவில் மட்டும்
மாறாமல் இருந்துவிட்டோம் !

புறவாழ்வில் புன்சிரிப்பு !
அகவாழ்வில்
சுகம்காணா தவிதவிப்பு !

தங்கம் வைரத்தை
தோண்டிப்பார்த்த
இரும்புமனம் -
இதயத்தை மட்டும்
எங்கும்
தேடிப்பார்க்கவில்லை !

அறிவின் வெளிச்சத்தில் ,
நாகரிக விளிம்பில்
நடைபோட்டாலும்
மனதில் இருள் மட்டும்
மண்டியே கிடக்கிறது !

பாலையாக தகிக்கும்
பாதை இதை
பனியாக குளிரச்செய்யும்
வசந்தம் ஒன்று
வருவது எப்போது ?

இருளகற்றும் பரிதியே !
எழுச்சியின் விடியலே !
எழுந்து வா ! விரைந்து வா !
எதிர்படும் இடர்யாவும்
கதிர்படும் பனியென
கரைந்து ஓடட்டும் !
துயர் தொலைத்து
மனித இனம்
மனம் நிறைய
மகிழ்ச்சி கீதம் பாடட்டும் !

ஞாயிறு, 21 ஜூன், 2009

காத்திருப்பேன்


பார்த்து ரசித்தேன் சிலநேரம் !
பாராமல் தவித்தேன் பலநேரம் !!

பேசி சிரித்தாய் சிலநேரம் !
பேசாமல் வதைத்தாய் பலநேரம் !!

கனவில் நிலைத்தாய் சிலநேரம் !
கண்ணுறக்கம் கலைத்தாய் பலநேரம் !!

புனலாக குளிர்ந்தாய் சிலநேரம் !
தனலாக தகித்தாய் பலநேரம் !!

பூந்தென்றலாய் பூசினாய் சிலநேரம் !!
புயலாக வீசினாய் பலநேரம் !!

என்னுடல் தழுவினாய் சிலநேரம் !
என்னுயிர்விட்டு நழுவினாய் பலநேரம் !!

விழிகளில் நீ இருந்தாய் சிலநேரம் !
விழிகளில் நீர் இருந்தது பலநேரம் !!

செவ்வானில் சிறகடித்தேன் சிலநேரம் !
கண்ணீரில் நான் மிதந்தேன் பலநேரம் !!

முத்தத்தின் நுட்பம் அறிந்தேன் சிலநேரம் !
யுத்தத்தின் வெட்பம் உணர்ந்தேன் பலநேரம் !!

எனக்காக அழுதிருந்தேன் சிலநேரம் !
உனக்காக தொழுதிருந்தேன் பலநேரம் !!

உன் நினைவால் வாழ்கிறேன் சிலநேரம் !
உன் பிரிவால் வீழ்கிறேன் பலநேரம் !!

நானாக நானிருந்தேன் சிலநேரம் !
நீயாக வாழ்ந்திருந்தேன் பலநேரம் !!

உன்னோடு நானிருந்தேன் சிலகாலம் !
உனக்காக காத்திருப்பேன் பலகாலம் !!